எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்பு; 100 சதவீத குதிரை பேரம்: இன்பதுரை எம்.பி. எக்ஸ் பதிவு

ராஜினாமா செய்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் த.வெ.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்பு; 100 சதவீத குதிரை பேரம்:  இன்பதுரை எம்.பி. எக்ஸ் பதிவு
Published on

சென்னை

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிட்டன. இவை தவிர, நாம் தமிழர் மற்றும் த.வெ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலை தனித்து எதிர்கொண்டன. இதனால், தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி ஏற்பட்டது.

தமிழக சட்டசபைக்கு, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது.

காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் முழு ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார். எனினும், பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், அதில் திருச்சி கிழக்கு தொகுதியை முதல்-அமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ளார். இதனால், அந்த தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேர் இன்று ராஜினாமா செய்தனர். வேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அவர்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.

இதனையடுத்து, அவர்கள் 3 பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர். இந்த சூழலில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறும்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்ததற்கான கடிதம் சட்டசபை விதிகளின்படி முறையாக உள்ளது. அதனால் அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.

இதனால், அவர்கள் ராஜினாமா செய்த தொகுதிகள் காலியான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்படும். அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இதன்படி, தமிழகத்தில் திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. ராஜினாமா செய்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் த.வெ.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவார்கள் என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை வெளியிட்ட எக்ஸ் பதிவில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக த.வெ.க. அமைச்சர் ஆதவ் அர்ஜுணாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு த.வெ.க. உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை. இது 100 சதவீத குதிரை பேரம்! என தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com