மோகனூர் பட்டாசு விபத்து: உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விற்பனை செய்ய வீட்டில் சட்டவிரோதமாக ஒரு டன் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளை வைத்திருந்தது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதை காவல்துறை எவ்வாறு அனுமதித்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்!

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். விபத்தில் உயிரிழந்த அண்டை வீட்டாரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்!

பட்டாசு விபத்தில் சில வீடுகள் தரைமட்டமாகி விட்டன. 20 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. அவற்றின் சேத மதிப்பை கணக்கிட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com