ராயபுரம் மண்டலத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: துணை ஆணையாளர் நேரில் ஆய்வு

வளர்ச்சித் திட்டப் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ராயபுரம் மண்டலத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: துணை ஆணையாளர் நேரில் ஆய்வு
Published on

சென்னை,

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, ராயபுரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தூர்வாரும் பணிகள்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராயபுரம் மண்டலம், வார்டு - 61க்குட்பட்ட சேட் காலனி 1ஆவது தெரு மற்றும் வார்டு - 63க்குட்பட்ட பாரதி சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், வார்டு–61க்குட்பட்ட காந்தி இர்வின் சாலையில் உள்ள இலவச ஒப்பனை அறையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, வார்டு-59க்குட்பட்ட அண்ணா சாலையில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

பின்னர், வார்டு–63க்குட்பட்ட பாரதி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி சீர்செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தெற்கு கூவம் சாலையில் உள்ள இயற்கை உரம் உற்பத்தி மையம், தெற்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் தெருவில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடப் பணி, வீரபத்திரன் தெருவில் உள்ள வள மீட்பு மையம், அங்கு கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையக் கட்டடப் பணி மற்றும் அங்குள்ள கால்நடைக் காப்பகத்தில் பராமரிக்கப்படும் மாடுகளின் விவரங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடித்திடவும், கால்நடை காப்பகத்தினை தூய்மையாகப் பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, மேற்பார்வைப் பொறியாளர் (வடக்கு) ஜி.சொக்கலிங்கம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com