விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே விஷம் குடித்து தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டனர்.
விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 70). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஓய்வுபெற்ற தபால் துறை அலுவலரான குருநாதன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

ஒரு மகன் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் ஜெகதீஸ்பாபு. ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி, மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடன் தனலட்சுமி, மகள் மஞ்சுளா (40) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். மஞ்சுளாவுக்கு திருமணமாகவில்லை. தபால் துறையில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

பிணமாக கிடந்தனர்

ஜெகதீஷ்பாபு நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அவருடைய தாய் தனலட்சுமி, சகோதரி மஞ்சுளா ஆகிய இருவரும் வீட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று காலை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனலட்சுமி, மஞ்சுளா ஆகியோர் பிணமாக கிடந்தனர்.

தற்கொலை

இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேருடைய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டனர்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com