இரணியல் அருகே மினிவேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல் - 2 வாலிபர்கள் பலி

இரணியல் அருகே மினிவேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
இரணியல் அருகே மினிவேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல் - 2 வாலிபர்கள் பலி
Published on

இரணியல்,

குமரி மாவட்டம் மண்டைக்காடு குன்னங்காடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ரமேஷ் (28). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் கேனில் குடிநீர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருடன் அழகன்பாறை அருள்சுந்தர் ராஜ் மகன் சுபாஷ்(32) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

இவர்கள் இருவரும் நேற்று இரவு வேலை முடிந்து ஒரே பைக்கில் நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் நோக்கி வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். பைக்கை ரமேஷ் ஓட்டினார்.

இந்வர்கள் வந்த மோட்டார் சைக்கிள் இரணியல் மேலத்தெரு ஜங்ஷன் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த மினிவேன் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். உடனடியாக இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுபாஷ் நேற்று இரவும், ரமேஷ் இன்று அதிகாலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து மினிவேன் டிரைவர் ஆலஞ்சி ராபின்ரோஸ் (35) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இரண்டு வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com