நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு; ஆயுதங்கள், 21 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டன

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் ஆயுதங்கள், 21 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டன.
நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு; ஆயுதங்கள், 21 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டன
Published on

நெல்லை,

நெல்லை மாநகராட்சியில் மேயராக பதவி வகித்தவர் உமாமகேசுவரி. இவர் தி.மு.க.வை சேர்ந்தவர்.

இவருடைய கணவர் முருகசங்கரன். இவர்கள் மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் ரோடு அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 23ந்தேதி வீட்டில் இருந்த முன்னாள் மேயர் உமாமகேசுவரி, முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அணிந்து இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், கொலை நடந்த அன்று சந்தேகப்படும்படியாக ஒரு கார் உமாமகேசுரியின் வீட்டு பகுதியில் 2 முறை சென்றது தெரியவந்தது. இதனால் அந்த கார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த கார் யாருடையது? காரில் சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அது நெல்லையை சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகரான சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனின் கார் என தெரியவந்தது.

அதன் அடிப்படையில் உமாமகேசுவரியின் கொலையில் சீனியம்மாளின் மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சீனியம்மாளுக்கும், உமாமகேசுவரிக்கும் இடையே கட்சியில் பதவி பெறுவதில் மோதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் மதுரை சென்று அங்கு பதுங்கி இருந்த கார்த்திகேயனை பிடித்து நெல்லைக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள கட்டிடத்தில் வைத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். மேலும் தனிப்படை போலீசாரும் விசாரித்தனர்.

அப்போது அரசியல் முன்விரோதம் காரணமாக உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன் ஆகியோரை கொலை செய்ததையும், இந்த கொலைகளை பார்த்ததால் பணிப்பெண் மாரியை கொன்றதையும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு நெல்லை காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

உமா மகேஸ்வரி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கத்திகள் பாளையங்கோட்டை கக்கன் நகரில் கைப்பற்றப்பட்டது. காணாமல் போன உமா மகேஸ்வரியின் 21 சவரன் நகைகள், கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் வீட்டில் கைப்பற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com