தூத்துக்குடியில் வாலிபர் கொலை: 10 பேர் கைது, 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் வாலிபர் கொலையில் கைதானவரின் வீட்டை சூறையாடிய கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தூத்துக்குடியில் வாலிபர் கொலை: 10 பேர் கைது, 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்தவர் சீனு (வயது 26). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த 24-ம் தேதி இரவில் அதே பகுதியில் உள்ள உப்பளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் நடத்திய விசாரணையில், சீனுவுக்கும், அவரது நண்பர் கபில்தேவுக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கபில்தேவ், ஜேசுராஜ், ஆகாஷ், முகேஷ், மதியழகன், சக்திபாலா, நாராயணன்(எ) நவநீதன், அருள்ராஜ் மற்றும் 2 இளஞ்சிறார்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சந்தோஷ், பிரகாஷ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். கைதானவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சீனு, கபில்தேவின் சகோதரியை தொடர்ந்து அவதூறாக பேசியதாலும், எங்களை கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாலும் நாங்கள் முந்திக் கொண்டு அவரை தீர்த்துக் கட்டினோம் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் சீனுவின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது இறுதி ஊர்வலத்தில் கும்பலாக சென்றவர்கள், சத்யாநகரில் உள்ள ஜேசுராஜ் வீட்டுக்குள் திடீரென்று புகுந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com