

சென்னை,
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு குரல் பதிவு மூலம் (வாய்ஸ் பதிவு) புகார் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:-
நான் எனது பெயரில் கட்சி நடத்தி வந்தேன். அதில், இருந்த ஈ.சி.ஆர். ராமச்சந்திரன், ராஜா ஆகியோரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் நீக்கினேன். அதன்பின் அவர்கள் ரவுடிகளோடு என் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நான் ஏற்கனவே, புகார் அளித்துள்ளேன். தற்போது நான் அரசியலை விட்டு விலகி இருக்கிறேன். 2 மாதங்களுக்கு முன்பு சிறிய விபத்தில் சிக்கி, உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. கால்கள் செயலிழந்து விட்டன. என்னால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை.
இந்த சூழ்நிலையில ராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு அளிக்கிறார்கள். அவர்களால் எனக்கும், எனது கணவரது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து உள்ளது. எனவே, நீங்கள் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராஜா, தீபாவிடம் கார் டிரைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.