சிங்கப்பெருமாள் கோவில் அருகே புதுமாப்பிள்ளை மர்ம சாவு - போலீசார் தீவிர விசாரணை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிளை மர்மமான முறையில் ஏரி கரையோரம் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே புதுமாப்பிள்ளை மர்ம சாவு - போலீசார் தீவிர விசாரணை
Published on

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பைகாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 28). இவர் மகேந்திரா சிட்டி பகுதியில் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆப்பூர் அடுத்த வளையக்கரணை பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பாக்கியலட்சுமி கடந்த 7-ந் தேதி கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த பெரிய விஞ்சியம்பாக்கம் ஏரிக்கரை அருகே புருஷோத்தமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் போலீசார் புருஷோத்தமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புருஷோத்தமன் உடல் அருகே மது பாட்டில் மற்றும் சோடா பாட்டில் கிடந்தது.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அடித்து கொலை செய்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். புருஷோத்தமனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com