சென்னை கொடுங்கையூரில் வெடித்த மர்ம பொருள்... பெண் காயம் - வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை கொடுங்கையூரில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் பெண் படுகாயமடைந்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் வெடித்த மர்ம பொருள்... பெண் காயம் - வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Published on

சென்னை,

சென்னை கொடுங்கையூரில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் பெண் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னை சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி லிங்கப்பு (வயது 54) என்பவர் இன்று காலையில் குப்பை கொட்டுவதற்காக சென்றபோது, அந்த பகுதியில் இருந்த மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்தது. இதில் மூதாட்டியின் கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவரது கணவர் சந்திரன் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் வெடித்த மர்ம பொருள் என்ன என்பது குறித்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் வெடித்தது வெடிபொருள் இல்லை என்றும் பழைய பேட்டரி அல்லது கெமிக்கல் அடங்கிய பொருளாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட துகள்களை சோதனைக்கு அனுப்பி உள்ளனர். இந்த சோதனைக்கு பிறகு வெடித்த பொருள் என்ன என்பது குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com