மத்திய அரசு மீது அவதூறு பரப்பும் மாணிக்கம் தாகூருக்கு கண்டனம் - நயினார் நாகேந்திரன்

காங்கிரஸ் கட்சிக்கும், மாணிக்கம் தாகூருக்கும் மக்கள் நலனைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மத்திய அரசு தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பதாகத் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாக்கூர் தொடர்ந்து பரப்பி வரும் அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையே எவ்விதப் பாகுபாடும் காட்டாமல், 'அனைவருக்குமான வளர்ச்சி' என்ற கோட்பாட்டின்படி செயல்பட்டு வருகிறது. கூட்டாட்சியை மதிக்கும் இந்த நல்லாட்சியின் கீழ், தமிழகத்தின் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களும் பிரதமரின் PMGKAY திட்டத்தின் மூலம் விலையில்லா உணவு தானியங்களைத் தங்கு தடையின்றி நேரடியாகப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, தங்களின் ஆரம்பக் கட்ட நிர்வாகத் தடுமாற்றங்களை மறைக்க இப்போது மத்திய அரசுக்குக் கடிதம் எழுதும் நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது. மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து செயல்படாமல், காங்கிரஸ் போன்ற கட்சிகளின் சதிகளுக்குத் தவெக தலைமை துணைபோவது துரதிர்ஷ்டவசமானது.

அதே சமயம், மாநில உரிமைகள் பற்றிப் பேசும் காங்கிரஸ் கட்சிக்கும், மாணிக்கம் தாகூருக்கும் மக்கள் நலனைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் என 'A' முதல் 'Z' வரையிலான அடுக்கடுக்கான பெரும் ஊழல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

எனவே, தவெக அரசு இத்தகைய ஊழல் கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களை விடுத்து, மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தித் தமிழக மக்களின் உண்மையான முன்னேற்றத்திற்கான வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com