நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம்: ஒரு மாத ஊதியத் தொகையை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்...!

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம்: ஒரு மாத ஊதியத் தொகையை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்...!
Published on

சென்னை,

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.

முதல்-அமைச்சர் 19.12.2022 அன்று நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்தைத் தொடங்கி வைத்து. அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை விடுத்தார். முதல்-அமைச்சர் இவ்விழாவிலேயே ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தினை நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டன்ற உறுப்பினர் பி. அப்துல் சமது ஆகியோரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கு. சின்னப்பா, எம். பூமிநாதன், டாக்டர் டி. சதன் திருமலைகுமார், ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோரும் தங்களது ஒருமாத ஊதியத்திற்கான காசோலைகளையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. சின்ராஜ் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com