'நந்தன்' சினிமா பட பாணியில் இன்னும் தொடரும் சாதிய அடக்குமுறை - வானதி சீனிவாசன் கண்டனம்

சமூக நீதித்துறை என்பது வெறும் மனுக்களை நின்று கொண்டு வாங்குவதும், அவர்களது வீட்டில் உண்பது மட்டும் இல்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாமர மக்களுக்கான சமூக நீதி என்பது தவெக அரசில் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தாழ்த்தப்பட்ட இன மக்களும், பெண்களும் அதிகாரத்திற்கு வரும்பொழுது இன்னும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. விழுப்புரம் மாவட்டம், கொடுங்கால் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிக்கும் மலர்விழி தனக்கான அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்த விடவில்லை என்று கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

தனக்கான தலைவர் நாற்காலி தரவில்லை எனவும், சுதந்திரதினத்தன்று கொடியேற்ற விடுவதில்லை என்றும் அவர் கூறியதாகக் வெளிவந்துள்ள செய்தியானது இன்னும் தொடர்கின்ற சமூக நீதியின் பேரவலம். பதவியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கே இவ்வாறான சாதிய கொடுமைகள் நடக்கும்போது பாமர மக்களுக்கான சமூக நீதி என்பது தவெக அரசில் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது.

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு என்ன பதில் சொல்லப் போகிறார்? தவெக அரசின் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கொள்கை' இதுதானா முதல்-அமைச்சர் அவர்களே! இவரைப் போன்றே இன்னும் நிறைய 'நந்தன்'கள் தங்களுக்கான உரிமைகள் இருந்தும் சாதிய அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சமூக நீதித்துறை என்பது வெறும் மனுக்களை நின்று கொண்டு வாங்குவதும், அவர்களது வீட்டில் உண்பது மட்டும் இல்லை அமைச்சர் வன்னி அரசு அவர்களே! மலர்விழி போன்றவர்களின் அதிகாரமும், உரிமைகளும் எப்போது முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறதோ அப்போதுதான் உண்மையான சமூக நீதி விடுதலை என்பதற்கான அடையாளம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com