நாங்குநேரி இரட்டைக்கொலை; 7 பேர் கைது: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம்

நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் உள்ள ஒரு தேநீர்க்கடை முன்பு இருந்தவர்களை அங்கு வந்த ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
நாங்குநேரி இரட்டைக்கொலை; 7 பேர் கைது: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம்
Published on

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் உள்ள ஒரு தேநீர்க்கடை முன்பு கடந்த 2-ம் தேதி இரவு ஒரு குழுவினர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென அரிவாளால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாக வெட்டியது.

இந்தத் தாக்குதலில் பெரும்பத்து இந்திராகாலனியைச் சேர்ந்த ஜான் (வயது 42) மற்றும் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரிநாத் கட்டா(50) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் நெல்சன்(60), கணேசன்(52), பிரபாகரன்(50), ராமசாமி(70) மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த சசிகுமார்(26) ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தென்னிமலையைச் சேர்ந்த கண்ணன்(20), அந்தோணி மைக்கேல்ராஜ்(19), உச்சிமாகாளி(23), வசந்தகுமார்(19), சுப்பையா(19), கல்யாணி(20), இசக்கிராஜா(19) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் நடந்த தொடர் கொலைச் சம்பவங்களுக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவத்தில் கைதானவர்கள் அனைவரும் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். இவர்கள் கடந்த சில நாட்களாக பெரும்பத்து கிராமத்தில் நோட்டமிட்டு, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் கூடும் இடத்தைக் கண்டறிந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு வேகமாகத் தப்பிப்பதற்காக, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடி இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

கொல்லப்பட்ட ஜானின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைப் பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் ஏர்வாடி வழியாக நாகர்கோவில் செல்லும் பேருந்து போக்குவரத்து சீரானது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக களக்காடு செல்லும் சாலையில் மட்டும் போக்குவரத்துத் தடை நீடிக்கிறது. இதற்கிடையே, ஒடிசா தொழிலாளி திரிநாத் கட்டாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com