தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் - அண்ணாமலை பேட்டி

அதிமுகவுக்கு மாற்று கருத்து இருந்தால் அதித்ஷாவுடன் பேசிக்கொள்ளட்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை சந்திக்க மெகா கூட்டணி அமைக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்ந்துள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அந்த கூட்டணியை உறுதி செய்ததுடன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இதற்கு விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் என்றார்.
பின்னர் மதுரை வந்த மத்திய மந்திரி அமித்ஷா, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று மீண்டும் கூறினார். சமீபத்தில் 'தினத்தந்தி'க்கு அமித்ஷா அளித்த சிறப்பு பேட்டியிலும் இதே கருத்தை உறுதிபட தெரிவித்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். அதில் பா.ஜனதாவின் பங்கு இருக்கும் என்றார். ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும், தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். ஆட்சியில் பா.ஜனதா பங்கேற்கும் என்று கூறியிருந்தார்.
மத்திய மந்திரி அமித்ஷாவின் இந்த கருத்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.தமிழ்நாடு முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தில் பிரசாரம் செய்து விட்டு புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று கூறியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த பதில் கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் சென்னையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்று மிகத்தெளிவாக அமித்ஷா கூறிவிட்டார். அவரது கருத்தையே நான் பேசுகிறேன். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம். எனது தலைவர்களின் நிலைப்பாடு மாறும்வரை நானும் நிலைப்பாட்டை மாற்ற மாட்டேன். அதிமுகவுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அதிமுகவினர் அமித்ஷாவுடன் பேசட்டும். கூட்டணி ஆட்சி கருத்தை தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றெல்லாம் இருக்க முடியாது. கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா தொடர்ந்து தெளிவாக கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன்.
பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி ஆட்சி குறித்து பேச தொடங்கி விட்டன. தனது கட்சி அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்றே ஒவ்வொரு தொண்டனும் நினைப்பான். அதிமுக - பாஜக கூட்டணி உருவானதில் எனது பங்கு எதுவும் இல்லை. நான் ஒரு தொண்டன்.
இவ்வாறு அவர் கூறினார்.






