

சென்னை,
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது. எனினும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இதுதொடர்பாக, டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகம், கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து ஜூலை 29-ந்தேதி முதல் தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது.
ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை. கர்நாடகாவில் நீர் தேவை அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலை தற்போது இல்லை என அம்மாநில அரசு கூறியது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்குமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில், கர்நாடக அரசு முறையீடு செய்தது.
ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையமும் உறுதிப்படுத்தியது. இதன்படி, தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மொத்தம் 84 அடி நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 81.95 அடியாக உள்ளது. கபினி அணை முழுக்கொள்ளளவை எட்டுவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடகாவில் அணைகள் நிரம்புகின்றன. இதனால், உபரி நீரை திறந்து விடுவதுதான் நல்லது. இயற்கை யாருக்கும் சொந்தமல்ல என்று கூறினார்.
இந்த நிலையில், "நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்” என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் நலனுக்கே துணை நிற்கிறது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் சூழல் உருவாகியுள்ளது.
எத்தனை இடையூறுகளும், எத்தனை தடைகளும் வந்தாலும், மக்களின் நலனையே சிந்திக்கும் நம் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அண்ணனிளின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை நிற்கிறது. மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை, சம்பா சாகுபடிகள் செழித்து வளர்ந்து, விவசாயிகளின் இல்லங்களில் வளமும் மகிழ்ச்சியும் பெருக இறைவனை மனமார வேண்டுகிறேன்.
"நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.