மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை தொடங்குகிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நவராத்திரி திருவிழா தொடக்கமாக ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் காட்சி அளிக்கிறார். மேலும் 13 அரங்குகளில் அலங்கார பொம்மைகளுடன் கொலுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை தொடங்குகிறது
Published on

மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு திருவிழா, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது.

நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம், கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனை, மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு தான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

கொலு மண்டபத்தில் மீனாட்சி அலங்காரம்

நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். அதன்படி நாளை( 15-ந் தேதி) ராஜராஜேஸ்வரி அலங்காரமும்,, 16-ந் தேதி அர்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது. 17-ந் தேதி ஏகபாதமூர்த்தி, 18-ந் தேதி கால்மாறிஆடியபடலம், 19-ந் தேதி தபசு காட்சி, 20-ந் தேதி ஊஞ்சல், 21-ந் தேதி சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, 22-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 23-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

13 அரங்குகள் அமைப்பு

நவராத்திரி விழாவையொட்டி சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 13-க்கும் மேற்பட்ட அரங்குகளில் விநாயகர், முருகன், சிவபெருமான், கால்மாறி ஆடிய நடராஜர், பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களில் அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள் உள்ளிட்ட இதர பொம்மைகள் வைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது தவிர சுவாமியின் வாகனங்கள், கொலு சாவடிகளில் இடம் பெறும். பக்தர்கள் அதனை கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொலு சாவடியில் அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள், இதர பொம்மைகளை உபயமாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம்.

மேலும் திருவிழாவையொட்டி பொற்றாமரை குளம், கோபுரங்கள், மற்றும் சன்னதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமியை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

திருக்கல்யாண மண்டபத்தில் கச்சேரி

திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைகமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com