

சென்னை,
நடிகர் ரஜினிகாந்தை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று சந்தித்தார். அப்போது தற்போதைய அரசியல் சூழல் குறித்து ரஜினிகாந்துடன், நயினார் நாகேந்திரன் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதாசாகேப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்மபூஷன் ரஜினிகாந்தை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான அரவிந்த் மேனனுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
அப்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம்.
இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் மாநில பிரசாரப் பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ் உடன் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.