

நெல்லை,
நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற துரை (வயது 45). இவர் சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த கோவிலில் கொடை விழா நடைபெறும் போது கடைகள் அமைப்பது, ஆடு, கோழி பலியிடுதல் உள்ளிட்டவைகள் சம்பந்தமாக கோவில் நிர்வாகத்திற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இருதரப்பினருக்கும் இடையே சமாதான கூட்டம் நடந்தது. அப்போது திடீரென்று கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த சிலர், சிதம்பரம், அதே ஊரைச் சேர்ந்த நடராஜபெருமாள் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பலத்த வெட்டுக்காயம் அடைந்த சிதம்பரம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். நடராஜ பெருமாள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த நடராஜ பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட சிதம்பரம் உடலும் அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், இருதரப்பினர் பிரச்சினை என்பதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நடராஜபெருமாளின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.