சம்பா பருவம் முழுமைக்கும் கர்நாடகத்திடமிருந்து நடுவர் மன்ற ஆணைப்படி நீரை பெற வேண்டும் - அன்புமணி

சம்பா பருவம் முழுமைக்கும் நீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சம்பா பருவம் முழுமைக்கும் நீர் வழங்க கர்நாடகத்திடமிருந்து நடுவர் மன்ற ஆணைப்படி நீரை பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடையை நெருங்கும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்றவும், சம்பா சாகுபடியைத் தொடங்கவும் வசதியாக மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும் அணையில் குறைந்த அளவு நீரே இருக்கும் நிலையில், சம்பா பருவம் முழுமைக்கும் நீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் நாள் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்ததாலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை காவிரியில் திறக்க கர்நாடக அரசு மறுத்ததாலும் குறித்த நாளில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முடியவில்லை. இடைப்பட்ட காலத்தில் கர்நாடக அணைகளிலிருந்து ஓரளவு தண்ணீர் வந்திருப்பதையடுத்து செப்டம்பர் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் காவிரியில் தண்ணீரை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து எந்தவொரு காலக்கட்டத்தில் நீர் திறக்க வேண்டும் என்றாலும், அணையில் குறைந்தது 90 அடி முதல் 100 அடி வரை, அதாவது 52 டி.எம்.சி முதல் 65 டி.எம்.சி வரை நீர் இருக்க வேண்டும். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.24 அடி, அதாவது 51.78 டி.எம்.சி ஆகும். அணைக்கு வினாடிக்கு 7,454 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது கடந்த ஜூன் 12-ம் தேதியின் நிலைமையான 79.52 அடி நீர்மட்டம், 41.52 டி.எம்.சி நீர் இருப்புடன் ஒப்பிடும் போது 10 டி.எம்.சி மட்டுமே அதிகமாகும். அணைக்கான நீர்வரத்தும் சுமார் 7,500 கன அடி என்ற நிலையிலேயே இருக்கும்போது, இயல்பான சூழலில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், இனிவரும் காலங்களில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சூழலில், இருக்கும் நீரைக் கொண்டு 40 நாள்களுக்கு மட்டுமே நீர் வழங்க முடியும். இதை உணர்ந்துதான் மேட்டூர் அணையில் இருந்து 45 நாள்களுக்கு மட்டும் நீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

மேட்டூர் அணையின் நிலவரம் இத்தகையதாக இருந்தாலும், இன்றைய சூழலில் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதைத் தவிர வேறு வழியில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இன்னொருபுறம் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டதால் தண்ணீர் எடுக்க முடியாமல் குறுவைப் பயிர்கள் கருகி வருகின்றன. அந்தப் பயிர்களைக் காக்கவும், வறண்டு கிடக்கும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வழங்கவும் மேட்டூர் அணையைத் திறப்பது கட்டாயம் ஆகும். அந்த வகையில் மேட்டூர் அணையைத் திறக்கும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.

ஆனால், சம்பா பருவ சாகுபடியை உறுதி செய்ய தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என்பதுதான் அடுத்தக்கட்ட வினா ஆகும். காவிரி பாசன மாவட்டங்களில் 14 லட்சம் ஏக்கரில் சம்பா, 4 லட்சம் ஏக்கரில் தாளடி என மொத்தம் 18 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். இந்தப் பயிர்களைக் காப்பாற்றுவதற்கு தொடக்கத்தில் தினமும் 1.75 டி.எம்.சி வீதமும், அடுத்து வரும் நாள்களில் சுமார் 1 டி.எம்.சி வீதமும் மொத்தம் 160 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். இதில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்தால் 50 முதல் 60 டி.எம்.சி வரை தண்ணீர் கிடைக்கும். அத்தகைய சூழலில் 100 முதல் 110 டி.எம்.சி நீர் மேட்டூர் அணையில் இருந்து தான் விடுவிக்கப்பட வேண்டும். அதை கர்நாடகத்திடமிருந்து பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய 45.95 டி.எம்.சியில் முதல் 26 நாள்களுக்கு 38.58 டிஎம்சி என நேற்று வரை 79.01 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை எவ்வளவு நீர் தமிழகத்திற்கு வந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. கடந்த 25-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழகத்திற்கு இன்னும் 28 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள நாள்களுக்கும் சேர்த்து 36 டி.எம்.சி, செப்டம்பரில் 36.76 டி.எம்.சி, அக்டோபரில் 20.22 டி.எம்.சி, நவம்பரில் 13.78 டி.எம்.சி, டிசம்பர் மாதத்தில் 7.35 டி.எம்.சி என டிசம்பர் மாதம் வரை கர்நாடகத்திடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய 114.11 டி.எம்.சி நீரை பெற்றால் மட்டுமே சம்பா, தாளடி பருவங்களை காவிரி பாசன மாவட்ட விவசாயிகளால் வெற்றிகரமாக செய்து முடிக்க இயலும்.

கர்நாடக அணைகளில் இன்றைய நிலவரப்படி 82.11 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 20,877 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் கர்நாடக அணைகளில் இருந்து தினமும் 2 டி.எம்.சி நீர் வழங்கப்பட்டால் செப்டம்பர் மாத இறுதிக்குள் கர்நாடகம் நமக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை வழங்கி விட முடியும். எனவே, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவறின் வாயிலாக அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கான தண்ணீரை அரசு பெற வேண்டும். அதன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் வெற்றிகரமாக செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com