நெல்லை: பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், மிரட்டி நகை பறிப்பு- 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

நெல்லையில் பெண்ணை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி, நகைகளை பறித்து மிரட்டிய 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
நெல்லை: பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், மிரட்டி நகை பறிப்பு- 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
Published on

நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகே சங்கர்நகர், ஆனந்த விலாஸ் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (வயது 34). இவரிடம் கடந்த 2016 ஆகஸ்ட் 25ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பசுவந்தனை, ராஜூவ்நகரைச் சேர்ந்த ஜோஸ்வா இமானுவேல் (வயது 47), விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 32) ஆகிய இருவரும் சேர்ந்து ஜெபம் செய்து பில்லி சூனியம் அகற்றுவதாக கூறி ஏமாற்றி, பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்து, பின்னர் மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்துள்ளனர்.

இதுகுறித்து உஷா தாழையூத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ஜோஸ்வா இமானுவேல், வினோத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (27.3.2025) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் தீர்ப்பு வழங்கினார். அதில் இவ்வழக்கில் தொடர்புடைய ஜோஸ்வா இமானுவேல், வினோத்குமார் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் முறையே ரூ.50 ஆயிரம், ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த தாழையூத்து உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா மற்றும் தாழயூத்து காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com