நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு: குற்றவாளி சுர்ஜித்தின் தாயார் கைது

கவின் ஆணவக் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு: குற்றவாளி சுர்ஜித்தின் தாயார் கைது
Published on

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பின்னர் சரவணன், உறவினர் ஜெயபால் மற்றும் வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும், சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையிலும், குற்றப்பத்திரிகையில் சுர்ஜித்தின் தாயான எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலும், சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com