நெல்லை: இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் பதிவிட்ட வாலிபர் கைது

நெல்லையில் இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் அருகே, வேளான்குளம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 26), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையைத் தூண்டும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.
இதுகுறித்து சீதபற்பநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து எஸ்.ஐ. செய்யது நிஷார் அகமது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சினையைத் தூண்டும் விதமாக புகைப்படத்தை வெளியிட்ட முருகனை நேற்று (26.3.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.






