பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ரூ.26½ லட்சத்தில் புதிய பெட்டிகள்

பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ரூ.26½ லட்சத்தில் புதிய பெட்டிகள் வாங்கப்பட்டன.
பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ரூ.26½ லட்சத்தில் புதிய பெட்டிகள்
Published on

பழனி,

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தைப்பூச திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானை பாதை பிரதான வழிப்பாதைகளாக உள்ளன. மலும் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் விரைவாக செல்வதற்காக மின்இழுவை ரெயில்கள் மற்றும் ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது. மின் இழுவை ரயில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல 8 நிமிடம் ஆகும். ஆனால் ரோப் காரில் 3 நிமிடத்தில், அதுவும் பழனி மலையின் இயற்றை அழகை பார்த்து ரசித்தபடி செல்லலாம். இதனால் பெரும்பாலான பக்தர்களின் தேர்வாக ரோப் கார் உள்ளது.

பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்வதற்கு ஒரு ரோப் காரும், அதேபோல் மலைக்கோவிலில் இருந்து அடிவாரத்துக்கு செல்வதற்கு மற்றொரு ரோப் காரும் இயக்கப்படுகிறது. இந்த ரோப் கார்களில் தலா 5 பெட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு பெட்டியில் 3 பக்தர்கள் பயணம் செய்யலாம்.

இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் இயக்கப்படும் ரோப் காரில் பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு புதிய பெட்டிகள் பொருத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து புதிய ரோப் கார் பெட்டிகள் வாங்கப்பட்டன. முதற்கட்டமாக 5 பெட்டிகள் லாரி மூலம் கொல்கத்தாவில் இருந்து நேற்று பழனிக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அடிவாரத்தில் உள்ள ரோப் கார் நிலையத்தில் 5 பெட்டிகளும் கிரேன் எந்திரம் மூலம் இறக்கி வைக்கப்பட்டன.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறுகையில், "பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு புதிய பெட்டிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள நிறுவனத்தில் 10 புதிய பெட்டிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. ஒரு பெட்டியின் எடை 290 கிலோ. ஒரு பெட்டியின் மதிப்பு ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் ஆகும். 10 பெட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். முதற்கட்டமாக நேற்று 5 பெட்டிகள் வந்துள்ளது. விரைவில் மீதியுள்ள 5 பெட்டிகள் வந்துவிடும். அவை வந்தபிறகு ரோப்காரில் பழைய பெட்டிகள் அகற்றப்பட்டு புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com