ரூ.13.94 கோடியில் புதிய வகுப்பறை கட்டடங்கள்: முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்

பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள் மற்றும் மிதிவண்டிகளையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.
ரூ.13.94 கோடியில் புதிய வகுப்பறை கட்டடங்கள்: முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
Published on

காஞ்சிபுரம்,

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் சமூக நோக்கத்தோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருக்கோயில்கள் சார்பில் கல்வி நிறுவனங்கள், பயிற்சி பள்ளிகள், கருணை இல்லங்கள், மூத்த குடிமக்கள் உறைவிடங்கள், மனநலக் காப்பகம், மருத்துவ மையங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் 25 பள்ளிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 10 கல்லூரிகளில் 22,455 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த நான்காண்டுகளில் இப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 138.13 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கலையரங்கம், விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளியானது பொருளாதார நெருக்கடியால் திருக்கோயிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை நீண்ட காலமாக செலுத்த முடியாத சூழலில் பள்ளியை திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அப்பள்ளியை திருக்கோயில் நிர்வாகமே ஏற்று நடத்திட உத்தரவிட்டதை தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியாக நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு ஏற்கனவே 1.66 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது இப்பள்ளியில் 981 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11.15 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடம், சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப்பள்ளியில் 2.79 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம், கலையரங்கம், கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் மற்றும் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அத்துடன், பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10,000/-, கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள் மற்றும் மிதிவண்டிகளையும் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com