

சென்னை,
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 82 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர். ஆனால், தட்கல் முன்பதிவின்போது, அடிக்கடி 'சர்வர்' பிரச்சினை ஏற்படுகிறது.
'கேப்ட்சா' குறியீடுகளும் கடினமாக இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறுகளால் டிக்கெட் முன்பதிவு அடிக்கடி தோல்வியில் முடிகிறது. இதனால், பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்களை பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் பீட்டா பதிப்பை ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய பீட்டா பதிப்பு, டிக்கெட் முன்பதிவை எளிமையாகவும், தடையின்றியும் செய்வதை நோக்கமாக கொண்டு 4 முக்கிய மேம்பாட்டு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யும்போது தேவையற்ற கேப்ட்சாக்களை நீக்குதல், தேவையற்ற பாப்-அப்களை அகற்றுதல், ஒளிரும் கிராபிக்ஸ், கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.
பயணிகள் அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகள் உள்ளதா என்பதைப் பார்க்கலாம்.
இந்த இணையதளம் வேகமான செக்-அவுட் செயல்முறையை வழங்குகிறது. இதன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தேவைப்படும் படிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இந்த இணையதளம் பயணிகளின் விவரங்களைச் சேமிக்கும். இதன் மூலம் மீண்டும் மீண்டும் முன்பதிவு செய்வது எளிதாகிறது.
இந்த பீட்டா பதிப்பை https://www.irctc.co.in/eticket/ என்ற முகவரியில் அணுகலாம். தற்போதுள்ள இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலும் பீட்டா பதிப்பிற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் எளிமைப்படுத்தப்பட்ட அம்சங்கள் குறித்துக் கருத்துக்களை வழங்குமாறு ரெயில்வே அமைச்சகம் பயனர்களை கேட்டுக் கொண்டுள்ளது.