புதிய தலைமைச்செயலகம் கட்ட பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு

ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் வெளியிட்டார்.
புதிய தலைமைச்செயலகம் கட்ட பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு
Published on

சென்னை,

புதிய தலைமைச்செயலகம் கட்ட பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகம்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயப்பட்டு வருகிறது. தற்போது, ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இந்த கட்டிடத்தில்தான் சட்டமன்ற கூட்ட அரங்கமும் உள்ளது. இதற்காக, மாதந்தோறும் ராணுவத்திற்கு தமிழக அரசு குத்தகை தொகை கட்டி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபையில் வெளியிட்டார். ஆனால், அப்போது எந்த இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமையப்போகிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இடம் தேர்வு

இந்த நிலையில், புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின் டெக் சிட்டிக்கு எதிரே உள்ள நிலம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தற்போது, பட்டினப்பாக்கம் சாந்தோம் பிரதான சாலையில் இருந்து அணுகு சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்க்கெட் மதிப்பு ரூ.2,047 கோடி

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த இடம் 21.37 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த பகுதியில் தற்போதைய மார்க்கெட் மதிப்பு சதுரடிக்கு ரூ.22 ஆயிரம் ஆகும். அதை வைத்து கணக்கிடும்போது, இடத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2,047 கோடியாக உள்ளது. இந்த இடத்தை பொதுத்துறை பயன்பாட்டிற்கு வழங்குவதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலப்பகுதி 1958-ம் ஆண்டு வீட்டு வசதி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. 1963 முதல் 1968-ம் ஆண்டு காலக்கட்டத்தில் 1,112 அரசு ஊழியர்கள் குடியிருப்புகளும், 96 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும் கட்டப்பட்டன. 1986-ம் ஆண்டு மேலும் 60 குடியிருப்புகளும், 1998-ல் 112 குடியிருப்புகளும் புதிதாக கட்டப்பட்டன. அதன்பிறகு குடியிருப்புகளின் எண்ணிக்கை 1,380 ஆக அதிகரித்தது.

ஆட்சேபனை இல்லை என கடிதம்

இந்த நிலையில், இதிலுள்ள 1,284 குடியிருப்புகள் சிதலமடைந்ததால், அவை இடிக்கப்பட்டன. தற்போது அந்த இடம் காலியாக உள்ளது. மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் தனக்கு சொந்தமான 96 குடியிருப்புகளை இடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், நிலத்தை பயன்படுத்துவதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமிஷனர் சமீரன் ஒப்புதல்

இதேபோல், தலைமைச்செயலகம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் இடத்தை வழங்கவும் கமிஷனர் சமீரன் ஒப்புதல் வழங்கியுள்ளார். நிலம், சாலை அமைப்பதற்கும், சில பயன்பாடுகளுக்கும் என்று வருவாய் துறையின் கீழ் உள்ள கூடுதல் நிலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com