பட்டினப்பாக்கத்தில் அமைகிறது புதிய தலைமைச்செயலகம்: அரசாணை வெளியீடு

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முதற்கட்ட அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் அமைகிறது புதிய தலைமைச்செயலகம்: அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடியில் நவீன வசதிகளுடன் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

புதிய தலைமைச்செயலகம்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயப்பட்டு வருகிறது. தற்போது, ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இந்த கட்டிடத்தில்தான் சட்டமன்ற கூட்ட அரங்கமும் உள்ளது. இதற்காக, மாதந்தோறும் ராணுவத்திற்கு தமிழக அரசு குத்தகை தொகை கட்டி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபையில் வெளியிட்டார். ஆனால், அப்போது எந்த இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமையப்போகிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

பட்டினப்பாக்கம்

இந்த நிலையில், புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின் டெக் சிட்டிக்கு எதிரே உள்ள நிலம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தற்போது, பட்டினப்பாக்கம் சாந்தோம் பிரதான சாலையில் இருந்து அணுகு சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மார்க்கெட் மதிப்பு ரூ.2,047 கோடி

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த இடம் 21.37 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த பகுதியில் தற்போதைய மார்க்கெட் மதிப்பு சதுரடிக்கு ரூ.22 ஆயிரம் ஆகும். அதை வைத்து கணக்கிடும்போது, இடத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2,047 கோடியாக உள்ளது. இந்த இடத்தை பொதுத்துறை பயன்பாட்டிற்கு வழங்குவதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்திிருந்தது.

அரசாணை

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று (09.09.2026) வெளியிட்டுள்ளது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் பரப்பளவில் நிலங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. இதன்படி அங்கு ரூ.1,200 கோடி மதிப்பில் அனைத்து நவீன வசதிகளுடன் புதிய தலைமை செயலகம் அமைய உள்ளது.

சட்டமன்றம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளை ஒரே ஒருங்கிணைந்த வளாகத்தின் கீழ் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com