தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள்: ஜனவரி 26 முதல் அமல்

தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 26ம் தேதி முதல் தூத்துக்குடி மேலூரில் நின்று செல்லும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 26-ம் தேதி முதல் சில முக்கிய ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தெற்கு ரெயில்வே மூலம் இயக்கப்படும் பல்வேறு ரெயில்களுக்கு புதிய ரெயில் நிறுத்தங்களை ரெயில்வே வாரியம் அனுமதித்துள்ளது. இந்த புதிய ரெயில் நிறுத்தங்களில் வருகிற ஜனவரி 26-ம் தேதி முதல் அந்தந்த ரெயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களிலும் பல்வேறு ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கோவில்பட்டியிலும், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும், மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ், புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் கடம்பூரிலும், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி, தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும், பாலக்காடு-திருச்செந்தூர், திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்திலும், தூத்துக்குடி-ஓகா, ஓகா-தூத்துக்குடி இடையே விவேக் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






