இரவு நேர ஊரடங்கு: நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கத் திட்டம்

இரவு நேர ஊரடங்கு காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை. வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை, அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு நாளை முதல் பகல் நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இரவு 10 மணி முதல் 4 மணி வரை பேருந்துகளை இயக்க அனுமதியில்லாததால், கோயம்பேட்டில் இருந்து நாளை முதல் பகல் நேரங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பகல் நேரத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும். அரசு பேருந்துகளில் ஞாயிறு மற்றும் இரவு நேர பயணங்களுக்கான முன்பதிவு கட்டணம் திருப்பி செலுத்தப்படும். இரவு நேர பேருந்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு பகல் நேர பேருந்துகளில் மாற்றி வழங்கப்படாது என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com