சிறைச்சாலைக்குள் முறைகேடாக எந்த பொருளும் உள்ளே வரக் கூடாது - அமைச்சர் நிர்மல் குமார்

கால அளவை தாண்டி சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறைச்சாலைக்குள் முறைகேடாக எந்த பொருளும் உள்ளே வரக் கூடாது - அமைச்சர் நிர்மல் குமார்
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பின்னர், அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி, இன்று எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறைத் துறையின் செயல்பாடுகள் குறித்து முதற்கட்டமாக புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், சிறைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில், அவை ஊடுருவும் வழிகளை தடுப்பது குறித்தும், சிறைச்சாலைக்குள் முறைகேடாக எந்த பொருளும் உள்ளே வரக் கூடாது.

சிறைக்கைதிகளுக்கு கொண்டுவரப்படும் பழங்கள் போன்ற பொருள்களை சிறைக்குள்ளேயே வாங்கி வழங்கும் வகையில் உள்வாரிச் சந்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் சிறைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், “சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரியுடன் இன்று ஆய்வு மேற்கொண்டோம். தமிழ்நாட்டில் மொத்தம் 13 சிறைச்சாலைகள் உள்ளன. அந்த சிறைசசாலைகளில் உள்ள தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சிறைச்சாலையில் உள்ள சமையல் கூடம், மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர் வசதி ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறைச்சாலையில் பார்வையாளர்களுக்கான வசதிகள், பார்வையாளர்கள் எளிதில் வந்து செல்லும் வண்ணம் நடைமுறைகளை எளிமையாக்குதல் குறித்தும், கால அளவை தாண்டி சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிறை கைதிகளின் மருத்துவ அறிக்கைகளை முழுமையாக நவீனப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை வழங்கிடவும், சிறைச்சாலைகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்துதல், சிறைச்சாலையில் உள்ள ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்துதல், சிறைச்சாலை பதிவேடுகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு தேவையான நிதிகளை பெறுவதற்கு முதல்வரின் ஒப்புதலை பெற்று வருங்காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com