

கோவை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் இன்று திமுக இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,
திமுகவில் பணியாற்றுவதற்கு இன்றைக்கு இளைஞரணி பயிற்சி மையமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மெயின் மேட்ச் விளையாடுவதற்குமுன் நெட்டில் பயிற்சி செய்வதுபோல் இன்று பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
உங்கள் வீட்டை முதலில் அரசியல்படுத்துங்கள். ஒவ்வொரு வீடாக சென்று கழகத்தின் கொள்கைகளையும், அரசின் திட்டங்களையும் எடுத்துக்கூறுங்கள்.
அடுத்த 50 நாட்களுக்கு நீங்கள் கொடுக்கப்போகும் உழைப்புதான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை காப்பாற்றப்போகிறது.
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு விற்றுவிட்டார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப்பாதையில் கொண்டு செல்கிறார்.
தமிழ்நாட்டை மு.க.ஸ்டாலின் அறிவுப்பாதையில் அழைத்து செல்கிறார். திமுகவை அமலாக்கத்துறை, சிபிஐ வைத்து மிரட்டல் பாஜக முயற்சிக்கிறது. திமுக அமலாக்கத்துறைக்கும் பயப்படாது, மோடிக்கும் பயப்படாது.
மோடியின் தந்தை வந்தாலும் எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது. இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும் இடையே நடக்கும் ஜனநாயகப்போர். இந்த போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்
திமுகவை அழித்துவிடலாம் என்று சிலர் பகல் கனவு காண்கின்றனர். திமுகவை யாராலும், எந்த நேரத்திலும் அழிக்க முடியாது. உயிர் போனாலும் போகுமே தவிர உதயசூரியன் எங்களை விட்டு போகாது.
எத்தனைபேர் வந்தாலும், யார் எதிர்த்து நின்றாலும் களத்தில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கப்போவது உதயசூரியன்தான்
என்றார்.