குன்றத்தூரில் காருக்குள் பிணமாக கிடந்த வடமாநில வாலிபர் - கொலையா? என போலீஸ் விசாரணை

குன்றத்தூரில் காருக்குள் வடமாநில வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குன்றத்தூரில் காருக்குள் பிணமாக கிடந்த வடமாநில வாலிபர் - கொலையா? என போலீஸ் விசாரணை
Published on

குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். சொந்தமாக கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான காரை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு, காரை சுற்றிலும் கவர் போட்டு மூடி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காரில் 'பார்க்கிங்' மின்விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத், கார் மீது போர்த்தி இருந்த கவரை எடுத்துவிட்டு பார்த்தபோது, காருக்குள் டிரைவர் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்தபடி வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார், காருக்குள் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியவந்தது.

காரை நிறுத்தி 3 நாட்கள் ஆனதுடன், கார் முழுவதும் கவரால் போர்த்தப்பட்டிருந்த நிலையில் அந்த வாலிபர் காருக்குள் எப்படி சென்றார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரை திருட வரும்போது யாராவது பார்த்துவிட்டு அடித்துக்கொலை செய்துவிட்டு கொலையை மறைக்க காருக்குள் போட்டு விட்டு சென்றார்களா? அல்லது வேறு எங்காவது கொலை செய்து விட்டு காருக்குள் உடலை கொண்டு வந்து போட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் காருக்குள் இருந்த கண்ணாடி சேதம் அடைந்து இருப்பதாலும் சீட் பெல்ட்டை முறையாக அணியாமல் இருப்பதாலும் போலீசாருக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com