மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

மழையில் நனையாமல் இருப்பதற்காக அருகில் இருந்த வேப்ப மரத்தடியில் சென்று நின்றார்.
மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
Published on

கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சில்வாரப்பட்டியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் திருச்செங்கோடு போர்வெல் வண்டியுடன் வந்திருந்தனர்.

நேற்று மாலை போர் போடும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது லேசான மழை பெய்தது. அப்போது மழையில் நனையாமல் இருப்பதற்காக ஒடிசா மாநிலம் நபரங்குபூர் பகுதியை சேர்ந்த சோனு ராம்கோண்டு (வயது 25) என்பவர் அருகில் இருந்த வேப்ப மரத்தடியில் சென்று நின்றார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் வேப்ப மரத்தின் வழியாக மின்சாரம் பாய்ந்து சோனு ராம்கோண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராம்கோண்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com