காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளி பலி - ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் உடலை சொந்த ஊர் கொண்டு செல்லும் செலவை ஏற்றுக்கொள்ளவதாகவும் ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளி பலி - ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும் போது தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சடலத்தை மீட்ட காட்டூர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி 1,000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதனைத் தொடர்ந்து, வடமாநில தொழிலாளிக்கு இழப்பீடு கேட்டு சகத் தொழிலாளர்கள் காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்திய நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் தொழிலாளர்களை விரட்டி அடித்தனர்.

அப்போது, துணை ஆணையர் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.அப்பகுதியில் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பள்ளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் உடலை சொந்த ஊர் கொண்டு செல்லும் செலவை ஏற்றுக்கொள்ளவதாகவும் ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com