

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய மைல் கல்லாக பரங்கிமலை-வேளச்சேரி இடையே நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரெயில் சேவை உள்ளது. இந்த சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி பயணித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 14-ந்தேதி 35 ஆயிரத்து 270 ஆக இருந்தது. பின்னர் 16-ந்தேதி பயணிகளின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 13 ஆக அதிகரித்துள்ளது. அதே போல, வேளச்சேரியில் 37 ஆயிரத்து 993 ஆக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, 69 ஆயிரத்து 247 ஆக அதிகரித்துள்ளது.
திருவான்மியூர், பெருங்குடி மற்றும் வேளச்சேரி போன்ற பகுதிகளில் அமைந்துள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு இந்த சேவை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சாலை நெரிசலில் சிக்காமல், குறைந்த கட்டணத்தில் விரைவாகச்செல்ல முடிவதால் பொதுமக்கள் இந்த சேவையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தென்சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் இந்த புதிய வழித்தடம் பெரும் பங்கு வகிக்கிறது. பயணிகளின் வசதிக்கேற்ப வரும் காலங்களில் கூடுதல் சேவைகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.