நாளை தமிழக முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்: செவிலியர்கள் சங்கம் அறிவிப்பு

அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 26ம்தேதி சென்னையில் ஒரு நாள் தர்ணா போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் சுபின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 26.4.2025 அன்று சென்னையில் நடைபெற்ற நமது சங்கத்தின் 3வது மாநில மாநாடு அறைகூவல் தீர்மானத்தின் அடிப்படையில் நமது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி உலக செவிலியர் தினமான 12.5.2025 அன்று (நாளை) கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வதுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நமது கோரிக்கைகளை அஞ்சல் அட்டை மூலம் அனுப்ப அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் எதிர்வரும் அனைத்து போராட்டங்களிலும் பெருந்திரளாக கலந்துகொண்டு நமது கோரிக்கைகளை வென்றெடுக்க அனைவரையும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கோரிக்கைகள்:
1. திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்.
3. எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
4. வெளிப்படையான பணியிட மாற்ற கலந்தாய்வு நடத்திட வேண்டும்.
5. செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும்.
6. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப NMC மற்றும் IPHS பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும்.
7. பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேல் படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
8. கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. மூலம் பணி நியமனம் பெற்ற அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
9. செவிலியர்களுக்கு 7, 14, 20 மற்றும் 25 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும்.
10. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும்.
11. கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.
12. ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடங்களை நிரப்பி 8 மணி நேர பணியினை உறுதி செய்திட வேண்டும்.
13. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர தன்மையுடைய செவிலியர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்.
14. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் Data Entry Operator பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்.
15. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலர்களை பணியமர்த்த வேண்டும்.
16. மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ளது போல் செவிலியர் பதவி பெயரை செவிலியர் அலுவலர் (Nursing Officer) என்று மாற்றிட வேண்டும்.
17. லாலி சீமாட்டி செவிலியர் காப்பகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
18. அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
19. அரசு செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள செவிலியர் போதகர் நிலை-2 காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
20. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாக கமிட்டி அமைக்க வேண்டும்.
21. பொது சுகாதார துறையில் செவிலியர்களுக்கு வழங்கப்படும் பழிவாங்கும் மாற்றுப் பணி ஆணைகளை கைவிட வேண்டும்.
22. செவிலியர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஒரே விதமான சீருடை வழங்க வேண்டும்.
23. காலம் முறை ஊதியத்திற்கு ஈர்க்கப்பட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் அனைவரையும் காலதாமதமின்றி பணி வரன்முறை செய்ய வேண்டும்.
24. 2 வருடங்கள் பணி முடித்த மாற்றுத்திறனாளி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
25. உயர்கல்விக்காக பணி விடுவிப்பு செய்யப்பட்ட செவிலியர்களை கல்வி ஆண்டு முடிந்த பின்பு அவர்கள் பணி செய்த இடத்திலேயே மீண்டும் பணியமர்த்த வேண்டும்.
எதிர் வரும் போராட்ட இயக்கங்கள்:
20.5.2025 அன்று பழைய ஓய்வூதிய திட்டம், பணிப்பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் நடத்தும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற வேண்டும். 26.6.2025 அன்று சென்னையில் ஒரு நாள் (24 மணி நேர) தர்ணா போராட்டம் நடத்தப்படும். 17.7.2025 அன்று சென்னை DMS அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






