

கடலூர்:
பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, விவசாயி. இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சத்து 67 ஆயிரத்து 540-க்கு பிளாஸ்டிக் குழாய்கள் வாங்கினார். ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்கும் போது, அந்த குழாயை அமைக்க முடியவில்லை. அப்போது தான் அந்த குழாய்கள் அனைத்தும் தரமற்றது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராமமூர்த்தி, கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத் தலைமையில் உறுப்பினர்கள் கலையரசி, பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர். இதில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய் விற்பனை செய்த நிறுவனம், விவசாயிக்கு குழாய் வாங்கிய தொகையை வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அவருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.