

சென்னை,
கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அ.தி.மு.க.வின் சார்பில், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளிக்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி. பிராபகர், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஆகியோர் நேற்று சென்னை தலைமை செயலகம் வந்தனர்.
அங்கு அவர்கள், தலைமை செயலாளர் இறையன்பை சந்தித்து, கொரோனா நிவாரண நிதிக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர்.
முதல்-அமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகை பின்னர் வழங்கப்படும் என்று தெரிகிறது.