தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, திடீரென தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த செம்மனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 6 மற்றும் 4 வயதில் 2 மகள்களும், 1½ வயதில் சிவ ரத்தீஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
நேற்று காலை கார்த்திக், அவருடைய மனைவி மற்றும் மாமியார் கூலி வேலைக்கு அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு சென்றனர். அப்போது அவர்கள் அந்த 3 குழந்தைகளையும் உடன் அழைத்து சென்றனர். செங்கல் சூளை அருகே 2 சிறுமிகளும், தங்கள் தம்பியுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 1½ வயது குழந்தை சிவ ரத்தீஷ் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது.
இதை பார்த்த அங்கிருந்த கார்த்திக், அவருடைய மனைவி மற்றும் மாமியார் அங்கு விரைந்து வந்து குழந்தையை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 1½ வயது ஆண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






