பாகலூர் அருகேஉயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பால் பரபரப்பு

பாகலூர் அருகேஉயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பால் பரபரப்பு
Published on

ஓசூர்:

ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள சேவகானப்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்கு மின்சாரம் கொண்டு செல்ல உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி குண்டப்பா என்பவரின் நிலத்தில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று பாகலூர் போலீசாரின் பாதுகாப்புடன் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த குண்டப்பா மற்றும் குடும்பத்தினர் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வந்த மின்வாரிய ஊழியர்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு உரிய இழப்பீடு, இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதற்கு மின்வாரியத்துறை அதிகாரிகள் விவசாய நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் மின்வாரியத்துறை மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அந்த குடும்பத்தினரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த பணிகளுக்காக எடுக்கப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு மற்றும் பயிர் சேத இழப்பீடு ஆகியவை குண்டப்பா குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியின்போது ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com