

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை கண்டித்து அமைதியான முறையில் பேரணியில் பங்கேற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய அடக்குமுறையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். டெல்லியில் இருந்து வெளியாகியுள்ள காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, போலீஸ் படையை பயன்படுத்தி அரசு அடக்குமுறையில் ஈடுபடுவது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன்று நீட்டுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல், தேசிய தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் இளைஞர்களின் கோரிக்கை மிகவும் தெளிவானது. அவர்களின் குரலை அரசு செவிமடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.