

சென்னை,
உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார்.
மரணமடைந்த மதுசூதனன் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று அதிகாலை எடுத்து வரப்பட்டது. அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் இன்று காலையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை இல்லத்தில் மதுசூதனன் உடலுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், மற்றும் கே.பி.முனுசாமி, உள்ளிட்டோரும் அதிமுக முன்னனி நிர்வாகிகளும் மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.