

சென்னை,
சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெறும் 6ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 1.40 கோடி முதியவர்களில் 47 லட்சம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
2-வது தவணை தடுப்பூசியை 22 லட்சம் முதியவர்கள் மட்டுமே போட்டுள்ளனர். இறப்பு விகிதம் அதிகமுள்ளோர் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பது சரியல்ல.
தமிழகத்தில் இதுவரை கொரோனா 3-வது அலைக்கான அறிகுறிகள் இல்லை. அறிகுறிகள் இல்லை என்றாலும் 3-வது அலை வராது என்று கூற இயலாது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. மழை காலங்களில் பரவும் நோய்களில் இருந்தும் மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.