மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகள்: உரிய இழப்பீடு வழங்குக! - டிடிவி தினகரன்

நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.
டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

நெல் மூட்டைகள் வீண்

அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் அரவைக்கு அனுப்பி வைப்பதில் ஏற்பட்ட தாமதமே தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை பாதுகாக்கத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யாத வேளாண்மைத் துறை அமைச்சர், மழையில் நனைந்து வீணான பின்பு ஆய்வு எனும் பெயரில் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருப்பது அவரின் பொறுப்பற்ற செயலையே வெளிப்படுத்துகிறது.

கொள்முதல் செய்திட வேண்டும்

ஏற்கனவே, மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நெற்பயிர்களும் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருப்பது விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் நிலைகுலையச் செய்திருப்பதோடு அரசுக்கும் கணிசமான நிதியிழப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகிப் போன நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, அனைத்து திறந்தவெளி நெல்கொள்முதல் நிலையங்களிலும் பல மாதங்களாக தேங்கியிருக்கும் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், அதன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com