ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டர் கொலை: போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய 2 ரவுடிகளின் கால் முறிந்தது

மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டர் கொல்லப்பட்ட வழக்கில் 2 ரவுடிகள் தப்பியபோது கீழே விழுந்ததில் அவர்களின் காலில் முறிவு ஏற்பட்டது.
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டர் கொலை: போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய 2 ரவுடிகளின் கால் முறிந்தது
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ரகு என்கிற ரகுநாதன் (வயது 29), பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 24-ந் தேதி அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த ரகுநாதன் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்றார்.

இதனிடையே ஆஸ்பத்திரிக்குள் புகுந்த கும்பல், அங்கிருந்த ரகுநாதனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது. இதைப்பார்த்து ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். மேலும் கொலை கும்பலும் அங்கிருந்து தப்பியது.

காலில் எலும்பு முறிவு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனிடையே கொலையில் தொடர்புடைய மேட்டூர் பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்கிற மாரி கவுண்டர் (37), மேட்டூர் ஜீவா நகரை சேர்ந்த மூர்த்தி (36), நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30) மற்றும் நிவாஷ் (19) ஆகிய 4 பேரை மடக்கினர். இவர்களில் மூர்த்தி மற்றும் வெள்ளையன் என்கிற மாரி கவுண்டர் ஆகியோர் பிரபல ரவுடிகள் ஆவர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி மூர்த்தி மற்றும் வெள்ளையன் என்கிற மாரி கவுண்டர் ஆகியோர் போலீசாரின் பிடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றனர். அப்போது அவர்கள் 2 பேரும் கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பிரகாஷ், நிவாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

காரணம் என்ன?

காலில் முறிவு ஏற்பட்ட வெள்ளையன் மற்றும் மூர்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் போலீசாரின் விசாரணையில் இறந்து போன பெயிண்டர் ரகுநாதன், வெள்ளையன் குழுவில் இருந்துள்ளார்.

பின்னர் கடந்த சில நாட்களாக அவருக்கு எதிர்ப்பான ஒரு குழுவினருடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெள்ளையன் பெயிண்டர் ரகுநாதனை கொலை செய்தது தெரியவந்தது.

எனினும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com