பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் மந்திரி அவதூறு பேச்சு: காங்கிரஸ், தி.மு.க. கண்டனம் தெரிவிக்காதது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய பாகிஸ்தான் மந்திரிக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று பா.ஜ.க. தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் மந்திரி அவதூறு பேச்சு: காங்கிரஸ், தி.மு.க. கண்டனம் தெரிவிக்காதது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி
Published on

கடும் கண்டனம்

பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய, இஸ்லாமிய அடிப்படைவாத நாடான பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, பிரதமர் நரேந்திரமோடியை, 'கசாப்பு கடைக்காரர்' என தரம்தாழ்ந்து விமர்சித்துள்ளார்.

அதுமட்டுல்லாது, 'பிரதமர் மோடியும், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்' என்று அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.

மத்திய மந்திரி பதிலடி

ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி என்பவர், அந்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதி. ஐ.நா. போன்ற உலக அரங்குகளில், ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும், அந்நாட்டின் கருத்தாகவே ஏற்றுக்கொள்ளப்படும். வெளியுறவுத்துறை மந்திரியின் வார்த்தை சற்று தடித்தால்கூட, அது அவரது நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தி விடும். தீராப் பழியை கொண்டு வந்துவிடும்.

அதனால், எந்தவொரு நாட்டிலும் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர்கள் மிகவும் கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவார்கள். ஆனால், பிலாவல் பூட்டோ சர்தாரி, தான் பொறுப்பான வெளியுறவு மந்திரி பொறுப்பில் இருக்கிறோம் என்பதை மறந்து, பேட்டை ரவுடி போல, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசியிருக்கிறார். அவரது அநாகரிகமான அத்துமீறலுக்கு, அங்கேயே நமது வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலடி கொடுத்திருக்கிகிறார்.

பயங்கரவாத சம்பவங்களுக்கு வேர்

ஒரே நாடாக இருந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள் இந்தியா, பாகிஸ்தான் என பிரித்தனர். இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடான பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நாற்றாங்காலாக உள்ளது. உலகெங்கும் பல்வேறு தருணங்களில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களுக்கான வேர்கள் பாகிஸ்தானில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க் இரட்டை கோபுர குண்டு வெடிப்புக்கு காரணமான, பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட எண்ணற்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த, இப்போதும் கொடுத்து வரும் நாடு பாகிஸ்தான்.

விமர்சனத்தை ஏற்க முடியாது

பயங்கரவாதிகளுக்கு தங்கள் நாட்டில் பயிற்சி அளித்து, இந்தியாவுக்குள் அனுப்பி, அமைதியை சீர்குலைத்து வரும் நாடு பாகிஸ்தான். இந்திய நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி மனிதகுலத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை போற்றி வளர்த்து வரும் பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி, 140 கோடி மக்களின் பிரதிநிதியான பிரதமர் மோடியை தரம் தாழ்ந்த விமர்சித்திருப்பதை ஏற்க முடியாது. பிலாவல் பூட்டோ சர்தாரி, தனிப்பட்ட மோடியை எதிர்க்கவில்லை. இந்தியாவை உலகின் வல்லரசாக உயர்த்தி கொண்டிருக்கும் பிரதமர் என்பதால் தான், விமர்சித்திருக்கிறார். அதாவது இந்தியாவை, 140 கோடி மக்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்.

கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

எனவே, பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். மாறாக அமைதி காப்பது நாட்டின் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே, இனியாவது பாகிஸ்தானுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் தக்க நேரத்தில், இந்திய மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com