வீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது

வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது
Published on

ரூ.30 ஆயிரம் லஞ்சம்

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட சீவாடி ஊராட்சியில் சென்னையை சேர்ந்த நிகமத்துல்லா என்பவர் நிலம் வாங்கி வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய சீவாடி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதனை அணுகினார். அப்போது அவர் தனக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

கைது

இதைடுத்து நிகமத்துல்லா சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகத்திடம், தன்னிடம் சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதன் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக புகார் அளித்தார். இதையடுத்து அவரிடம் ரசாயனம் தடவிய ரூ. 30 ஆயிரத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

இதையடுத்து நிகமத்துல்லா சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதனிடம் ரூ.30 ஆயிரத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அரங்கநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com