

சென்னை:
சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,750 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முந்தைய தி.மு.க. அரசு தீவிரமாக முன்னெடுத்து வந்தது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த திட்டத்துக்காக வளத்தூர், தண்டலூர், சிங்கிலிப்பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் வருவாய்த்துறை ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் பகுதி விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டார். தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசாரத்தின்போதும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.
இந்தநிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார். "பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடருகிறதா அல்லது கைவிடப்படுகிறதா? இது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் அல்லது தகவல் வந்துள்ளதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், "பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்த திட்டத்தை கைவிடுவது தொடர்பாக 2026-ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு தமிழக அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து பொறுப்புகளும் சம்பந்தப்பட்ட விமான நிலைய மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில அரசைச் சார்ந்தவை. நிலம் கையகப்படுத்துதல், தேவையான அனுமதிகளைப் பெறுதல், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே திட்டம் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.