

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் மயில் ஒன்று தோகை விரித்தாடிய காட்சி பக்தர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கோவில் வளாகத்தில், ஆண் மயில் ஒன்று தனது வண்ணமயமான தோகையை முழுமையாக விரித்து பெண் மயிலின் முன்னால் கம்பீரமாக நடனமாடிய நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்தது.
முருகப் பெருமானின் வாகனமான மயிலே, அவரது திருத்தலத்தின் பிரகாரப் பகுதியில் தோகை விரித்து ஆடியதைக் கண்டு, கோவிலுக்கு வந்திருந்த ஆன்மீக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்த திரளான பக்தர்கள் இந்த மனோகரமான காட்சியைக் கண்டு ரசித்ததுடன், தங்களது மொபைல் போன்களில் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து மகிழ்ந்தனர். கோவில் வளாகத்தில் மயில் தோகை விரித்தாடிய இந்த தெய்வீக காட்சி, அங்கு கூடியிருந்த பக்தர்களிடையே நெகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.